அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்பதற்கு முன், நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் வரிசையில், முதலிடத்தில் இருப்பது வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா தான், குறிப்பாக கடந்த வாரம் மட்டும், அமெரிக்காவில் கொரோனா பரவல் ஜெட் வேகத்தில் பரவியது.
தற்போது வரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 1 கோடியே 20 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.
இவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் தற்போதுள்ள இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் அமெரிக்காவில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும்.
மொத்த பாதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.